குற்றியலுகரம்
குறுகிய ஓசைகளை உடைய உகரம் குற்றியலுகரம் ஆகும்.
அதாவது உகரமானது தனது 1 மாத்திரை அளவில் இருந்து 1/2 மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பதே ஆகும்.
குற்றியலுகர எழுத்துக்கள்
கு,சு,டு,து,பு,று
குற்றியலுகரத்தின் வகைகள்
குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு 6 வகையாகப் பிரிக்கலாம். அவையாவன,
1.நெடில்தொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வன்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
போன்றவை ஆகும்.
1.நெடில்தொடர்க் குற்றியலுகரம்
குற்றியலுகர எழுத்திற்கு முன் உள்ள எழுத்தானது நெடிலாக இருந்தால் அது நெடில்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
இது பொதுவாக இரண்டு எழுத்துக்களில் மட்டுமே வரும்.
எ.கா
மாடு
மாடு என்னும் சொல்லில் மா என்பது நெடில் எழுத்து .
டு என்பது குற்றியலுகர எழுத்து.
எனவே டு என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் மா என்னும் நெடில் எழுத்து வந்துள்ளதால் இது நெடல்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
2.ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
ஆய்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
அதாவது குற்றியலுகர எழுத்திற்கு முன் ஆய்த எழுத்து (ஃ) வருவது ஆகும்.
எ.கா
அஃது, இஃது, எஃகு, போன்றவை ஆகும்.
அஃது என்னும் சொல்லில் உள்ள ஃ என்பது ஆய்த எழுத்து.
து என்பது குற்றியலுகர எழுத்தாகும்.
எனவே து என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் ஃ என்னும் ஆய்த எழுத்து வந்துள்ளதால் இது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
3.உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
உயிரெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா
வரலாறு, அரசு, ஒன்பது, கயிறு
போன்றவை ஆகும்.
வரலாறு என்னும் சொல்லில் று என்பது குற்றியலுகர எழுத்தாகும். அதற்கு முன் உள்ள லா என்னும் உயிர்மெய் எழுத்தை பிரித்தால் ல்+அ எனப் பிரியும் இதில் உள்ள அ என்னும் எழுத்தானது உயர் எழுத்தாகும். எனவே இது உயிர்த்தொடர்க்
குற்றியலுகரம் ஆகும்.
4.வன்தொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய்யை அடுத்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா
பாக்கு, பேச்சு, பாட்டு, பற்று, உப்பு
போன்றவை ஆகும்.
பாக்கு என்னும் சொல்லில் கடைசியில் உள்ள கு என்பது குற்றியலுகர எழுத்தாகும் அதற்கு முன் உள்ள க் என்னும் எழுத்தானது வல்லின மெய் என்பதால் இது வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
5.மென்தொடர்க் குற்றியலுகரம்
மெல்லின மெய்யை அடுத்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா
பண்பு, பந்து , அம்பு, கன்று, பஞ்சு, பங்கு போன்றவை ஆகும்.
பண்பு என்ற சொல்லின் கடைசியில் உள்ள பு என்னும் எழுத்து குற்றியலுகர எழுத்தாகும் அதற்கு முன் உள்ள ண் என்னும் எழுத்தானது மெல்லின மெய் ஆகும் எனவே இது மென்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
6.இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இடையின மெய்யைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா
எய்து, மார்பு, சால்பு, மூழ்கு போன்றவை ஆகும்.
எய்து என்னும் சொல்லின் கடைசியில் உள்ள து என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் ய் என்ற இடையின மெய் வந்துள்ளதால் இது இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக